வியாழன், 16 அக்டோபர், 2008

தன்கையே தனக்குதவி

அதிகமான இரத்த இழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு செய்வதென்பது நீண்ட காலமாக மருத்துவர்கள் பயன் படுத்தும் ஒரு சிகிச்சை முறை. முக்கியமாக சத்திர சிகிச்சைகள் திட்டமிடப்படும்போது இதற்கு இவ்வளவு இரத்தம் தேவைப்படலாம் என முன்கூட்டியே நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து பின்னர் சத்திர சிகிச்சைகளை தொடங்குவது வழமை. சத்திர சிகிச்சையின் போது அல்லது அதற்கு பின்னான காலப்பகுதியில் குருதிப்பெருக்கு ஏற்பட்டால் சிலவேளைகளில் மேலதிக குருதியை வழங்கவேண்டிய நிர்ப்பந்ததில் வைத்தியர்கள் இருப்பார்கள். ஒரு வைத்தியசாலைக்கு தேவையான குருதி அங்கே காணப்படும் இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இரத்த வங்கிகள் அல்லாத சிறிய வைத்தியசாலைகள் தங்களுக்கு அருகில் இருக்கும் இரத்த வங்கியுள்ள பெரிய வைத்தியசாலைகளில் தங்கள் இரத்த தேவைகளுக்காகத் தங்கியிருக்கும். 


இந்தப் பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காணும் முனைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட முறைதான் ஒருவரின் குருதியை எடுத்து அவருக்கே பாவிக்கும் Autologus Transfusion என்ற முறை! இவ்வாறு ஒருவரின் குருதியை அவருக்கே பாவிப்பதில் பல்வேறு நுட்பங்கள் பாவிக்கப்படலாம். 

ஒருவருக்குசத்திரசிகிச்சை திட்டமிடபபடும்போது முதலிலேயே அவரது குருதியை சேமித்து அவருக்கு வழங்கும் முறை உள்ளது. இதன்போது சத்திர சிகிச்சை நடைபெறும் தினத்திற்கு 4 வாரங்களுக்கு முன்னர் ஒரு பைந்து ரத்தமும் இவ்வாறு ஒரு வார கால இடைவெளிகளில் ஒவ்வொரு பைந்து குருதியும் சேர்க்கப்படும். ஒரு பைந்து இரத்தம் என்பது 450 மில்லிலீற்றர் குருதியாகும். இவ்வாறு சேர்க்கப்பட்ட குருதி இரத்தம் மூலம் பரவும் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். (அவரவர் குருதியை அவரவருக்கு செலுத்தும்போது கூட இந்த சோதனை தேவைதானா என நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது.) இவ்வாறு மொத்தமாக 4 பைந்து இரத்தம் சேமிக்கப்பட முடியும். சாதாரண தானம் செய்பவருக்கு ஆகக்குறைந்தது ஒரு டெசி லீற்றருக்கு 12 கிராம் ஈமோகுளோபின் இருக்கவேண்டும் என முன்பு சொன்னேன். ஆனால் தனக்குத் தானே தானம் செய்பவருக்கு ஆரம்பத்தில் ஒரு டெசி லீற்றருக்கு குறைந்தது 11 கிராம் இருந்தாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். இவ்வாறு சேமிக்கப்பட்ட இரத்தம் விசேட அடையாளத்துடன் தனியான குளிரூட்டியில் சேமிக்கப்படும். சத்திரசிகிச்சையின்போது இரத்தம் ஏற்றப்படும் தேவை ஏற்படாது விட்டால் இந்த குருதி வேறு ஒருவருக்காகவும் பாவிக்கப்படாது வீசப்படும். இது இந்த முறையில் உள்ள குறைபாடு என்றும் சொல்லலாம். ( சாதாரண தானம் மூலம் பெறப்பட்ட குருதி என்றால் அது வேறு ஒரு நோயாளிக்கு பாவிக்கப்படலாம்.) ஆனாலும் இந்த விசேட முறையிலான தனக்குத்தானே இரத்தம் வழங்கும் முறையால் அரத்தம் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் சாத்தியம் குறைவு, மற்றும் இரத்தம் ஏற்றப்படும்போது ஏற்படும் எதிர்ப்பு ஒவ்வாமை ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறைவு. தவிர மிகவும் அரிதாக காணப்படும் பம்பாய் ஓ போன்ற வகையில் குருதியை கொண்டிருப்போர்களுக்கு இவ்வாறான தனக்குத் தானே குருதி வழங்கல் முறை மிகவும் பயனுள்ளது


இரத்த வங்கிகள் குருதியின் கூறுகளான செங்குழியங்கள், வெண்குழியங்கள், குருதிச் சிறுதட்டுகள், குருதித் திரவ இழையம் போன்றனவற்றை சேமித்து வைத்திருக்கும். 
இரத்தவங்கிகள் யாரிடமிருந்து குருதியை பெற்றுக்கொள்கின்றன? குருதியை தானம் செய்பவர்கள் மூன்று வகையினர். ஒருவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி இலவசமாக பொதுநர நோக்கோடு தானம் செய்பவர் முதலாவது வகையினர். தங்கள் உறவினர் நண்பர்களின் இரத்தத் தேவைக்காக வந்து தானம் செய்பவர்கள் இரண்டாம் வகையினர், காசு பெற்றுக்கொண்டு இரத்தத்தை வழங்குபவர்கள் மூன்றாம் வகையினர். இவ்வாறு பணம் பெற்று குருதியை வழங்குவது இலங்கையில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பொது நோக்கோடு தானம் செய்பவர்களிடமிருந்தும், உறவினர் நண்பர்களுக்காக தானம் செயப்வர்களிடமிருந்தும் மட்டுமே தற்போது இரத்தம் பெறப்படுகிறது.
இரத்ததானம் செய்பவர்கள் நோய்நொடி இல்லாதவர்களாகவும், போதியளவு ஈமோகுளோபின் கொண்டவர்களாகவும் (ஒரு டெசி லீற்றருக்கு குறைந்தது 12 கிராம்), ஆபத்தான பாலியல் தொடர்புகள் இல்லாதர்களாகவும், குறைந்தது 50 கிலோகிராம் உடல்நிறை உடையவர்களாகவும் இருத்தல் அவசியம். 
இவ்வாறு தானமாகப் பெறப்பட்ட குருதியின் அளவைவிட அதிக நோயாளிகளுக்கு அதிக குருதித் தேவை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் வைத்தியர்கள் கையைப்பிசைந்து கொண்டிருக்கும் தன்மை எதிர்காலத்தில் ஏற்படலாம். அதைத் தவிர சில மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றையவர்கள் தந்த குருதி மாற்றீடுகளை மறுக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கும் ஒரு மாற்று வழியை தேடவேண்டிய நெருக்கடி வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தானமாக வழங்கப்படும் குருதி எப்போதும் ஆய்வு கூடப்பரிசோதனைகளின் பின்னரை பாவிக்கப்படுகிறது என்றாலும் உலகத்தில் அதிகரித்து வரும் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் குருதி மூலம் பரவும் சந்தர்ப்பம் சிறிய அளவில் இன்னமும் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.






தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் இன்னொரு வகை சத்திர சிகிச்சைக்கு சற்று நேரத்திற்கு முன்னர் சத்திர சிகிச்சைக்கூடத்தில் வைத்து அவரின் குருதியை எடுத்து அதற்கு பதிலாக சேலைன் ஏற்றிவிட்டு சிகிச்சையை ஆரம்பித்தல் ஆகும். இம்முறையில் இரண்டு பைந்து இரத்தம் சேமிக்கமுடியும். பின்னர் சத்திர சிகிச்சை முடியும் தறுவாயில் மீண்டும் இரத்தம் ஏற்றப்படும். இதன்போது இரண்டாவதாக சேகரிக்கப்பட்ட பைந்து முதலில் ஏற்றப்படும். முதலாவதாக சேகரிக்கப்பட்ட பைந்து இரண்டாவதாக ஏற்றப்படும். இங்கே இரண்டு பை இரத்தமும் நோயாளியுடனேயே இருப்பதால் அடையாளக்குறிகள் மாறுவதன் மூலம் தவறான இரத்தம் செலுத்தப்படும் அபாணம் இல்லை. அத்துடன் சத்திர சிகிச்சை முடிந்நதும் மீண்டும் இரத்தம் ஏற்றப்படுவதால் வீண்விரயமும் குறைவு. ஆனால் வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர் போன்றோரின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியமானது.


தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் இன்னொரு முறைதான் சத்திர சிகிச்சையின்போது வெளியேறும் குருதியை சேர்த்து பின்னர் சுத்திகரித்து மீண்டும் நோயாளிக்கு ஏற்றும் முறையாகும். இதை எல்லா சத்திர சிகிச்சையிலும் பாவிக்கமுடியாது. என்பு சத்திர சிகிச்சை, இதய சத்திர சிகிச்சை, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை போன்றவற்றில் மட்டும் பாவிக்கமுடியும். கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகமுள்ள குடல் சத்திர சிகிச்சை போன்றசவ்வில் இம்முறையை பாவிக்கவே முடியாது. இந்த முறையை பாவிப்பதற்கு சிர விசேட இயந்திரங்களும் அவசியமானவை.
என்னதான் தன்கையே தனக்குதவி என்று இருந்தாலும் உடவில் கிருமிதொற்று உள்ள நோயாளிகள், சிலவகை இதய நோயாளிகள், வலிப்பு நோய் உள்ளவர்கள், குருதி ஆமுக்கம் அதிகமுள்ள தாய்மார்கள், வளர்ச்சி குறைநடத குழந்தையை கருவில் தாங்கும் தாய்மார்கள், புற்று நோய் உள்ளவர்கள் என்று தனக்குத் தானே குருதி வழங்கல் முறையில் பங்கெடுக்கமுடியாதவர்கள் பலரும் உள்ளார்கள். எனவே சாதாரண குருதிக் கொடையாளிகளை மருத்துவ உலகம் எப்போதும் எதிர்பார்த்தே இருக்கிறது. உங்களுக்கு என்ன வயதாகிறது? பதினெட்டு முடிந்து விட்டதா? இதுதான் நல்ல நேரம். ஒருமுறை இரத்ததானம் செய்துபாருங்கள். உலகத்தையே வென்றுவிட்டது போல உணர்வீர்கள். இது ஒரு புண்ணியமாகப் போகட்டும்.