வியாழன், 30 ஜூலை, 2009

காட்சியை உணரும் கண்களும் கண்களை வாட்டும் நோய்களும்

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று பாடிக் கொண்டிருந்த தேனீர்க் கடை வானொலியைக் கேட்டு ரசித்தவாறு சந்தியைக் கடக்க முற்பட்ட வேளையில் முன்னால் வந்த முதியவருடன் மோதி இருவரும் சைக்கிளால் தெருவில் விழுநதோம் விழுந்தவரைக் கைகொடுத்து எழுப்பிவிட அந்த முதியவர் கேட்ட முதற்கேள்வி கண்ணைப் பிடரிக்கை வைத்துக் கொண்டே வந்தனீர்? தவறு என்பக்கம் என்பதால் நானும் தலையைக் குனிந்தபடி நடந்தேன்


கண்கள் எமது முகத்தில் இருக்கின்ற பிரதானமான புலனங்கம். கவிஞர்களால் மட்டுமல்ல எமது உடலாலும் அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. முகத்திலே மிகவும் பாதுகாப்பாக என்புக் குழியினுள் வைக்கக்பட்டிருக்கும் கண்களைக் கண்மடலும், இமையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும். தவிர கண்ணீர் சிரப்பியிலிருந்து சுரக்கப்படும் கண்ணீர் அடிக் கொருக்கால் கண்களைக் கழுவிக் கொண்டே இருக்கும். இந்தக் கழுவல் வேலையைச் செய்ய எம்மையறியாமலே கண்மடல்கள் மூடித்திறந்து ஒரு வைப்பரை (Whiper) போலச் செயற்படும்.
கண்ணின் பிரதான தொழில் பார்வையைக் கொடுப்பதைத் தவிர பேசும்போது கருத்தைத் தெரிவிக்க உதவியாகவும் (Non Verbal communication) வேகத்தை உணர்வதற்கும், தூரத்தை அறிவதற்கும் கண்ணின் செயற்பாடுகள் காரணமாக இருக்கின்றன. ஒளியை ஒடுக்கி விம்பத்தை ஏற்படுத்துவதற்காக கண்வில்லையையும் (Lense) உள்ளே செல்லும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவதற்காகக் கதிராளியும் (Iris) விம்பத்தைப் பதிய வைத்து அவற்றைக் கணத்தாக்கங்களாக மாற்ற விழித்திரையும், (Retina) கண்ணில் கூறுகளாக் காணப்படும். தவிர கண்ணை அங்கே இங்கே அசைப்பதற்கு கட்தசைகள் உதவியாக இருக்கும். விழித்திரையில் விழுந்த விம்பம் நரம்பு கணத்தாக்கங்களாக மாற்றப்படுவதற்கு அங்கே கோல் கலங்களும் (Rods) கூம்புக் கலங்களும் (Cores) காணப்படும். கண்ணிலிருந்து வெளியேறும் நரம்புகள் (வலது இடது நரம்புகள்) மண்டையோட்டின் அடித் தளத்தில் கபச்சுரப்பிக்கு (Pituitary Gland) மேலாக இணைந்து பிரிந்து பின்னர் கல்கரைன் என்ற பகுதியை நோக்கிச் செல்லும். நமது உடலில் அதிக ATP சக்தி உடைக்கப்படுவது இவ்வாறு விம்பத்தை புலனாக மாற்றுவதற்காகவே என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
கண்ணைப் பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சாதாரணமாக் கண்ணைத் தாக்கும் கண்நோய் (Conjunctivitis)இலிருந்து பார்வை பறிபோகுமளவிற்குப் பயங்கரமான Optic neutitis(பார்வை நரம்பு அழற்சி) வரை பல்வேறுபட்ட பிரச்சனைகள் கண்ணிலே ஏற்படலாம்.
பொதுவாக ஏற்படும் கண்நோய் அதிக ஆபத்து இல்லாதது. தொற்று உள்ள நாட்களில் கண்சிவந்து, பீளை சாறி, பார்க்கவே பயங்கரமாக இருந்தாலும் இந்த நோய் தானாகவே சரியாகிவிடும். (Self Limiting) இந்தக் காலப் பகுதியில் கண்களைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதும், மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றி விடாமல் இருக்க நோயாளியின் பாவனைப் பொருட்களை பாவிக்காது விடுவதும் செய்ய வேண்டிய தடுப்பு முறைகளாக இருக்கும். அதிக ஒளியைப் பார்க்கும் போது கண்கள் கூசக்கூடும். இக்கூச்சம் நோய் மாறியதும் பழைய நிலைக்கு வந்துவிடும்


கண்ணில் பிரசர் அதிகமாவதைக் குளுக்கோமா என்று மருத்துவப் பெயரால் அழைப்பார்கள். கண்ணிலே காணப்படும் நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத பட்சத்தில் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தற்போது கண்அழுத்தத்தை செவ்வையாக அளக்கும் கருவிகளும், நீர்மயவுடனீர் உருவாதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் தற்போது சர்வ சாதாரணமாக பாவனையில் உள்ளதால் குளுக்கோமா நோய் தற்போது அதிகமாகப் பிரச்சனைகளைக் கொடுப்பதில்லை.
கண்பார்வை பற்றி சொல்லும் போது விற்றமின் ஏ பற்றிப் பலருக்கு ஞாபகம் வரலாம். கண்பார்வை நிறப் பொருளை ஆக்குவதற்கு விற்றமின் ஏ இன்றியமையாதது. விற்றமின் ஏ குறைபாடு ஏற்படும் போது கண்களில் புள்ளியும் உலர்வுத் தன்மையும் காணப்படும். பால் மற்றும் ஈரல் போன்ற விலங்குணவுகளிலும், மஞ்சள் நிறமான பழவகைளிலும் (அட எங்கடை மாம்பழம்) விற்றமின் ஏ அதிகமாகக் காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரை விற்றமின் ஏ குறைபாட்டால் பார்வை பாதிக்கப்படுவது குறைவாகவே காணப்படுகிறது.
கண்ணில் விம்பத்தை ஒருக்கும் தன்மையில் குறைபாடு உள்ளவர்களுக்கு (Refractory) கண்ணாடிகள் அல்லது ஒட்டும் வில்லைகள் (Contact Lense) மூலம் குறைபாடுகளை சரி செய்து கொள்ளலாம். கண்ணாடி அணிபவர்கள் கூட காலத்திற்குக் காலம் கண்ணைப் பரிசோதித்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.



வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை கற்ராக்ட் (Cataract) எனப்படும் விழியின் ஊடுபுகவிடும் தன்மை (வில்லையில்) குறைந்து போதல். இவற்றுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சையில் வில்லை அகற்றப்பட்டடு செயற்கை வில்லைகள் பொருத்தப்படும். இது தற்போது இலகுவாக செய்யப்படக் கூடிய சத்திர சிகிச்சையாக உள்ளது.
கண்ணுக்கு பரம எதிரிகளான நோய்கள் தான் நீரிழிவும் (Diabetic mellitus) அதிக குருதியமுக்கமும்(hypertension).நீரிழிவை பொறுத்தவரை அது Cataract ஏற்படுவதை அதிகரிக்கிறது. தவிர நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாடற்று இருக்கும் நீரிழிவு நோயானது டயபிடிக் றெட்டினோபதி (Diabetic retinopathy) என்ற நோயை கண்ணில் ஏற்படுத்தும். இந்த நிலையில் விழித்திரையில் அதிக குருதிக்கலன்கள் உருவாவதால் பார்வையில் குறைபாடு ஏற்படும். இந்நிலை ஏற்படாது பாதுகாக்க நீரிழிவு நோயாளர்கள் தங்கள் குருதி வெல்ல நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த டயபிடிக் றெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் லேசர் கதிர் சிகிச்சை மூலம் கண்பார்வை மேலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.
அதியுயர் குருதியமுக்கம் விழித்திரையிலுள்ள குருதிக்கலன்களை தடிப்படைய வைக்கும். தவிர திடீரென அதிகரிக்கும் குருதியமுக்கம் காரணமாக விழித்திரை பிரிவடைந்து நிரந்தர பார்வையிழப்பு ஏற்படலாம். இதனை முன் கூட்டியே வராமல் தடுப்பதற்கு குருதியமுக்கத்தைகட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான்

.
.
கடைசியாக ஒரு விடயம் கண்மூலம் அனுப்பப்படும் செய்திகள் கல்கரைன் சல்கஸ் (calcarine sulcus) எனுமிடத்தில் மூளையால் உணரப்படுவதாக சொன்னேன் அல்லவா? அந்த கல்கரைன் சல்கஸ் எங்கே இருக்கு தெரியுமோ? பிடரிபாகத்தினுள்ளே தான். இனி யாரும் யாரைப் பார்த்தும் கண் என்ன பிடரியுக்கையோ எனக் கேட்கக் கூடாது. என்ன விஷயம் எண்டு உங்களுக்குத் தெரியுந்தானே?


வீரகேசரி 18.11.2007

பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.


பிரசவம் எவ்வாறு நிகழ்கிறது என்று யாரையாவது கேட்டால் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியைப் போல தாய் ஒருவர் பெரும் வேதனையுடன் (வயிற்று வலியுடன்) வைத்தியசாலையில் அனுமதிக்க்படுவது போலவும் உடனே அவர் பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் சில நிமிடங்களில் ஒரு தாதி வெளியே ஓடி வந்து உங்களுக்கு ஒரு பையன் அல்லது பெண் பிறந்திருக்கிறார் என்று சொல்வது போலவும் காட்சிகள் ஓடலாம் ஆனால் குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை
.


சாதாரணமாக யோனிவழிப் பிரசவம் (Normal Vaginal Delivery) என்பது பிரசவ வலி வந்தவுடன் பிரசவ அறைக்குள் தாய் குழந்தையைப் பெறுவதாகவோ அல்லது பிரசவலி (Oxytocin)எனப்படுகின்ற ஓமோன் வகையை ஊசி மூலம் ஏற்றி பிரசவ வலியை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பெறும் முயற்சியாகவோ இருக்கலாம். எது எவ்வாறாயினும் கருப்பைச் சுருக்கத்துடன் (Uterine Contraction) கருப்பைக் கழுத்து திறக்கப்பட்டு (Cervical dilatiation)குழந்தை வெளியே வரும் படிமுறைகள் நிகழும்.

சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான வலி ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று நோவு சற்று அதிகமாக நிகழக் கூடும்.

கர்ப்பகாலம் 35 வாரங்களை அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் திகதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் பிரக்ஸன் கிரிக் எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான நோக்கள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை உணர்வது என்று நீங்கள் கேட்கலாம். பிரசவ வலியின் போது கடுமையான கருப்பைச் சுருக்கத்துடன் வேதனை அதிகரித்துச் செல்வதுடன் இரு குத்து வலிகளுக்கிடையிலான நேர இடைவெளி (The Interval between the contraction) குறைந்து செல்லும். உதாரணமாக ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு தடவை வருகின்ற வலி பின்னர் இருபது நிமிடங்களுக்கு ஒரு தடவையாகவும் பதினைந்து தடவைகளுக்கு ஒரு முறையாகவும் ஏற்பட்டு பிரசவவலியாக மாறும் போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குள்ளும் மூன்று தடவைகள் குத்து எழும்பல் நிகழும்.சாதாரணமாக பிரசவ வலி எழும்பும் போது பன்னீர் குடம் உடைந்து திரவம் வெளியேறும் போது தாயானவள் உடனடியாக பிரசவ விடுதிக்கு அல்லது பிரசவமனைக்கு அனுப்ப்பட வேண்டும்.அங்கே மருத்துவர் பிரசவ நிலையை அளவிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும் போது எனீமா கொடுப்பதன் மூலம் குடலிலிருந்து மலம் அகற்றப்படும் (இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் போது தாயின் மலமும் வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி விடும்) இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர் குடம் உடைக்கப்படும். இதன் போது வெளியேறும் அம்னியன் பாய்பொருளின் நிறம் அவதானிக்கப்படும். பெரும்பாலும் அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக அல்லது மெல்லிய வைக்கோல் நிறமுடையதாக இருக்கும் (உண்மையில் அம்னியன் பாய்பொருள் என்பது மென்சவ்வுகளின் சுரப்புக்களையும் குழந்தை கழித்த சிறுநீரையும் கொண்ட திரவமாகும்) பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின் ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும். தொடர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பு அவதானிக்கப்படும். குழந்தையின் இதயத் துடிப்பானது பினாட் என்கின்ற உடலொலிபெருக்கி மூலமாகவோ அல்லது இயந்திரத்தின் மூலம் வரைபாகவோ (CTG) பெற்றுக் கொள்ள முடியும்







ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவர் கருப்பைக் கழுத்து விரிவை (Cervical dilatation) அளவிட்டுக் கொண்டிருப்பார். கருப்பைச் சுருக்கம் குழந்தையின் இதயத்துடிப்பு / தாயின் நாடித்துடிப்பு குருதியமுக்கம் என்பன தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். பிரசவவலி உச்சக் கட்டத்தை அடையும் போது வலியைச் சற்றுக் குறைப்பதற்காக பெத்தடீன் போன்ற வலி நிவாரணிகள் தாய்க்கு ஏற்றப்படும். சாதாரணமாக பிரசவ காலமானது 12-18 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும். இக்காலப் பகுதியில் தாய் உணவு நீராகமின்று (Fasting) வைக்கப்படுவார். அடடா குழந்தையைப் பெறும் நோவுடன் இருக்கும் தாயை பட்டினி போடும் கல் நெஞ்சக்காரர்களா மருத்துவர்கள் என நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. பிரசவத்தில் ஏதும் சிக்கல் நிகழ்ந்து அறுவைச் சிகிச்சை ஏதாவது செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான தயார் நிலையே இந்த Fastingஇதன்போது ஊசி வழியாகத் தாய்க்கு தேவையான நீராகரம் சென்று கொண்டிருக்கும். குழந்தையின் இதயத்துடிப்பு குறையும் பட்சத்தில் (foetal distress) அல்லது குழந்தையின் அம்னியன்பாய் பொருளினுள் மலம் கழிக்கும் பட்சத்தில் அல்லது நீண்ட நேரமாகியும் குழந்தை பெறமுடியாத சந்தர்ப்பத்தில் (Prolong Labour) சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
குழந்தை பிறப்பதற்கு அண்மித்த நிலையில் குழந்தையின் தலை வெளியே வர முயற்சிக்கும் இதன் போது வலி உச்ச நிலையை அடையும்.

குழந்தையின் தலை இலகுவாக வெளியே வருவதற்காகவும் தாயின் யோனியின் வழியில் கிழிவுகள் ஏற்படாதிருக்கவும் எபிசியோட்டமி (Episiotomy) என்ற சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும். தொடர்ந்து தலை வேகமாக வந்து மோதுவதைத் தடுக்க கையால் அணை கொடுக்கப்படும். தலை வெளியே வந்ததும் அந்த நேரம் குழந்தை பெறப்படும் நேரமாகக் குறிக்கப்படும். (உங்கள் சாதகம், கிரகநிலை, செவ்வாய் தோஷம் எனப்படும் இந்த வேளைகளில் சோதிடர்களால் கணிக்கப்படும்.) தலையை தொடர்நது தோள்களும் பின்னர் முழுக் குழந்தையும் வெளியே இழுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் தொப்பிள் நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்திலிருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். குழந்தை பிறந்தவடன் வீரிட்டு அழ வேண்டும். இதுவே குழந்தையின் சுவாச தூண்டல். அவ்வாறு குழந்தை அழாவிட்டால் நாம் அதனை தூண்ட வேண்டி ஏற்படும்.

.
அப்பாடா குழந்தை பிறந்துவிட்டது என்று இருந்துவிட முடியாது. அதன் பிறகும் திக் திக் நிமிடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். என்ன என்று கேட்கிறீர்களா? சூல்வித்தகம் முழுமையாக வெளியேறும் வரை பிரசவம் முடிந்துவிட்டதாக கூற முடியாது. பொதுவாக குழந்தையை தொடர்ந்து சூல்வித்தகமும் வெளியேறிவிடும். ஆனாலும் சிலவேளைகளில் கருப்பையை விட்டு வெளியேற மாட்டேன் என்று நீண்டநேரம் அடம்பிடிக்கும், சூல்லித்தகத்தை கருப்பையின் உள்ளே கைவிட்டு மருத்துவர் வெளியே எடுப்பார். பின்னர் எபிசியோட்டமி தைக்கப்படும். இதன் பிறகும் திகில் நிமிடங்கள் முடிவதில்லை. சிலவேளைகளில் கருப்பையிலிருந்து குருதி பெருகுவது நிற்காவிடில் மீண்டும் எல்லோரது நெஞ்சத்திலும் பயம் பற்றிக் கொள்ளும். எனவே குருதிப்பெருக்கை அவதானிப்பதற்காக பிரசவத்தின் பின்னர் ஏறத்தாழ 2 மணித்தியாலங்கள் தாய் கண்காணிப்பின் கீழ் பிரசவ அறையினுள்ளேயே வைத்திருக்கப்படுவார். இதன்போது குழந்தையை பாலுட்ட தாயிடம் குழந்தை வழங்கப்படும். இவ்வளவு காலமும் சுமந்த வேதனை குழந்தையை முத்தமிடும் தாய்க்கு பஞ்சாக பறந்துவிடும். சாதாரணமாக குழந்தை பிறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் (வேறு குழப்பங்கள் தாய்க்கோ குழந்தைக்கோ இல்லாதவிடத்து) தாய் சேய் இருவரும் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இப்போது சொல்லுங்கள் திரைப்படங்களில் வருவது போல பிரசவம் என்பது பயங்கரமான அனுபவம் இல்லைதானே? என்ன சரியோ நான் சொல்லுறது?



28.10.2007
வீரகேசரி