வியாழன், 30 ஜூலை, 2009

காட்சியை உணரும் கண்களும் கண்களை வாட்டும் நோய்களும்

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்” என்று பாடிக் கொண்டிருந்த தேனீர்க் கடை வானொலியைக் கேட்டு ரசித்தவாறு சந்தியைக் கடக்க முற்பட்ட வேளையில் முன்னால் வந்த முதியவருடன் மோதி இருவரும் சைக்கிளால் தெருவில் விழுநதோம் விழுந்தவரைக் கைகொடுத்து எழுப்பிவிட அந்த முதியவர் கேட்ட முதற்கேள்வி கண்ணைப் பிடரிக்கை வைத்துக் கொண்டே வந்தனீர்? தவறு என்பக்கம் என்பதால் நானும் தலையைக் குனிந்தபடி நடந்தேன்


கண்கள் எமது முகத்தில் இருக்கின்ற பிரதானமான புலனங்கம். கவிஞர்களால் மட்டுமல்ல எமது உடலாலும் அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. முகத்திலே மிகவும் பாதுகாப்பாக என்புக் குழியினுள் வைக்கக்பட்டிருக்கும் கண்களைக் கண்மடலும், இமையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும். தவிர கண்ணீர் சிரப்பியிலிருந்து சுரக்கப்படும் கண்ணீர் அடிக் கொருக்கால் கண்களைக் கழுவிக் கொண்டே இருக்கும். இந்தக் கழுவல் வேலையைச் செய்ய எம்மையறியாமலே கண்மடல்கள் மூடித்திறந்து ஒரு வைப்பரை (Whiper) போலச் செயற்படும்.
கண்ணின் பிரதான தொழில் பார்வையைக் கொடுப்பதைத் தவிர பேசும்போது கருத்தைத் தெரிவிக்க உதவியாகவும் (Non Verbal communication) வேகத்தை உணர்வதற்கும், தூரத்தை அறிவதற்கும் கண்ணின் செயற்பாடுகள் காரணமாக இருக்கின்றன. ஒளியை ஒடுக்கி விம்பத்தை ஏற்படுத்துவதற்காக கண்வில்லையையும் (Lense) உள்ளே செல்லும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவதற்காகக் கதிராளியும் (Iris) விம்பத்தைப் பதிய வைத்து அவற்றைக் கணத்தாக்கங்களாக மாற்ற விழித்திரையும், (Retina) கண்ணில் கூறுகளாக் காணப்படும். தவிர கண்ணை அங்கே இங்கே அசைப்பதற்கு கட்தசைகள் உதவியாக இருக்கும். விழித்திரையில் விழுந்த விம்பம் நரம்பு கணத்தாக்கங்களாக மாற்றப்படுவதற்கு அங்கே கோல் கலங்களும் (Rods) கூம்புக் கலங்களும் (Cores) காணப்படும். கண்ணிலிருந்து வெளியேறும் நரம்புகள் (வலது இடது நரம்புகள்) மண்டையோட்டின் அடித் தளத்தில் கபச்சுரப்பிக்கு (Pituitary Gland) மேலாக இணைந்து பிரிந்து பின்னர் கல்கரைன் என்ற பகுதியை நோக்கிச் செல்லும். நமது உடலில் அதிக ATP சக்தி உடைக்கப்படுவது இவ்வாறு விம்பத்தை புலனாக மாற்றுவதற்காகவே என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
கண்ணைப் பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சாதாரணமாக் கண்ணைத் தாக்கும் கண்நோய் (Conjunctivitis)இலிருந்து பார்வை பறிபோகுமளவிற்குப் பயங்கரமான Optic neutitis(பார்வை நரம்பு அழற்சி) வரை பல்வேறுபட்ட பிரச்சனைகள் கண்ணிலே ஏற்படலாம்.
பொதுவாக ஏற்படும் கண்நோய் அதிக ஆபத்து இல்லாதது. தொற்று உள்ள நாட்களில் கண்சிவந்து, பீளை சாறி, பார்க்கவே பயங்கரமாக இருந்தாலும் இந்த நோய் தானாகவே சரியாகிவிடும். (Self Limiting) இந்தக் காலப் பகுதியில் கண்களைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதும், மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றி விடாமல் இருக்க நோயாளியின் பாவனைப் பொருட்களை பாவிக்காது விடுவதும் செய்ய வேண்டிய தடுப்பு முறைகளாக இருக்கும். அதிக ஒளியைப் பார்க்கும் போது கண்கள் கூசக்கூடும். இக்கூச்சம் நோய் மாறியதும் பழைய நிலைக்கு வந்துவிடும்


கண்ணில் பிரசர் அதிகமாவதைக் குளுக்கோமா என்று மருத்துவப் பெயரால் அழைப்பார்கள். கண்ணிலே காணப்படும் நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத பட்சத்தில் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தற்போது கண்அழுத்தத்தை செவ்வையாக அளக்கும் கருவிகளும், நீர்மயவுடனீர் உருவாதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் தற்போது சர்வ சாதாரணமாக பாவனையில் உள்ளதால் குளுக்கோமா நோய் தற்போது அதிகமாகப் பிரச்சனைகளைக் கொடுப்பதில்லை.
கண்பார்வை பற்றி சொல்லும் போது விற்றமின் ஏ பற்றிப் பலருக்கு ஞாபகம் வரலாம். கண்பார்வை நிறப் பொருளை ஆக்குவதற்கு விற்றமின் ஏ இன்றியமையாதது. விற்றமின் ஏ குறைபாடு ஏற்படும் போது கண்களில் புள்ளியும் உலர்வுத் தன்மையும் காணப்படும். பால் மற்றும் ஈரல் போன்ற விலங்குணவுகளிலும், மஞ்சள் நிறமான பழவகைளிலும் (அட எங்கடை மாம்பழம்) விற்றமின் ஏ அதிகமாகக் காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரை விற்றமின் ஏ குறைபாட்டால் பார்வை பாதிக்கப்படுவது குறைவாகவே காணப்படுகிறது.
கண்ணில் விம்பத்தை ஒருக்கும் தன்மையில் குறைபாடு உள்ளவர்களுக்கு (Refractory) கண்ணாடிகள் அல்லது ஒட்டும் வில்லைகள் (Contact Lense) மூலம் குறைபாடுகளை சரி செய்து கொள்ளலாம். கண்ணாடி அணிபவர்கள் கூட காலத்திற்குக் காலம் கண்ணைப் பரிசோதித்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.



வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை கற்ராக்ட் (Cataract) எனப்படும் விழியின் ஊடுபுகவிடும் தன்மை (வில்லையில்) குறைந்து போதல். இவற்றுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சையில் வில்லை அகற்றப்பட்டடு செயற்கை வில்லைகள் பொருத்தப்படும். இது தற்போது இலகுவாக செய்யப்படக் கூடிய சத்திர சிகிச்சையாக உள்ளது.
கண்ணுக்கு பரம எதிரிகளான நோய்கள் தான் நீரிழிவும் (Diabetic mellitus) அதிக குருதியமுக்கமும்(hypertension).நீரிழிவை பொறுத்தவரை அது Cataract ஏற்படுவதை அதிகரிக்கிறது. தவிர நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாடற்று இருக்கும் நீரிழிவு நோயானது டயபிடிக் றெட்டினோபதி (Diabetic retinopathy) என்ற நோயை கண்ணில் ஏற்படுத்தும். இந்த நிலையில் விழித்திரையில் அதிக குருதிக்கலன்கள் உருவாவதால் பார்வையில் குறைபாடு ஏற்படும். இந்நிலை ஏற்படாது பாதுகாக்க நீரிழிவு நோயாளர்கள் தங்கள் குருதி வெல்ல நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த டயபிடிக் றெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் லேசர் கதிர் சிகிச்சை மூலம் கண்பார்வை மேலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும்.
அதியுயர் குருதியமுக்கம் விழித்திரையிலுள்ள குருதிக்கலன்களை தடிப்படைய வைக்கும். தவிர திடீரென அதிகரிக்கும் குருதியமுக்கம் காரணமாக விழித்திரை பிரிவடைந்து நிரந்தர பார்வையிழப்பு ஏற்படலாம். இதனை முன் கூட்டியே வராமல் தடுப்பதற்கு குருதியமுக்கத்தைகட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான்

.
.
கடைசியாக ஒரு விடயம் கண்மூலம் அனுப்பப்படும் செய்திகள் கல்கரைன் சல்கஸ் (calcarine sulcus) எனுமிடத்தில் மூளையால் உணரப்படுவதாக சொன்னேன் அல்லவா? அந்த கல்கரைன் சல்கஸ் எங்கே இருக்கு தெரியுமோ? பிடரிபாகத்தினுள்ளே தான். இனி யாரும் யாரைப் பார்த்தும் கண் என்ன பிடரியுக்கையோ எனக் கேட்கக் கூடாது. என்ன விஷயம் எண்டு உங்களுக்குத் தெரியுந்தானே?


வீரகேசரி 18.11.2007

கருத்துகள் இல்லை: